மாணவர்களுக்கு குட்நியூஸ்…முழு மதிப்பெண் போடுங்கள்- ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மே 23 ஆம் தேதியும்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரு தினங்களுக்கு முன்பும் முடிவடைந்த நிலையில்,10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. அதன்படி,மொத்தம் 17 லட்சம் மாணவர்கள் எழுதிய 1.87 கோடி விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 8-ஆம் தேதி வரை  நடைபெறுகிறது.

விடைத்தாள் திருத்தும் பணிக்காக ஒரு அறையில் 1 முதன்மைத் தேர்வாளர்,1 கூர்ந்தாய்வு அலுவலர், 6 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 8 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.தமிழ்,ஆங்கிலம் பாட விடைத்தாள்கள் காலை 15,மதியம் 15 என ஒரு ஆசிரியர் நாள் ஒன்றுக்கு 30 விடைத்தாள்கள் மட்டுமே திருத்த வேண்டும்.அதேபோல்,இயற்பியல், வேதியியல் கணிதம் பாட விடைத்தாள்களை காலை 12, மதியம் 12 என ஒரு ஆசிரியர் நாள் ஒன்றுக்கு 24 விடைத்தாள்கள் மட்டுமே திருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், தேர்வு முடிவுகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜூலை 7-ல் வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை தெரிவித்திருந்தது.

இதனையடுத்து,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில்,அந்த விடைத்தாள்களை திருத்தும் பணி வரும் ஜூன் 9 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில்,10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமை கூடாது என்றும்,கேட்கப்பட்ட வினாக்களுக்கு மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால்,தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 2,25,534 மாணவர்கள்,11 ஆம் வகுப்பு தேர்வை 2,58,641 மாணவர்கள்,12 ஆம் வகுப்பு தேர்வை 1,95,292 மாணவர்கள் என மொத்தம் 6,79,467 மாணவர்கள் எழுதவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.இதனைத் தொடர்ந்து,பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு,தேர்வு எழுதாத மாணவர்களை உடனடியாக துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Comment