ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு தி.மு.க – காங்கிரஸ் கட்சிகள்தான் காரணம் என்றும், அதனால் அவர்களை போர்க் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தமிழக மாவட்டங்கள் முழுவதும் அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க கழக அமைப்புச் செயலாளருமான நத்தம் விசுவநாதன், ”எதற்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டை போல முந்திக்கொண்டு அறிக்கை விடும் ஸ்டாலின், ஈழ விவகாரத்தில் இவ்வளவு பெரிய உண்மையை உடைத்துச் சொல்லிச் சென்றிருக்கும் ராஜபக்ஷே விவகாரத்தில் வாயை மூடி மௌனமாக இருப்பது ஏன் ? குற்ற உணர்வு அவரை உறுத்துகிறது. மடியிலே கணம். அதனால் அவருக்கு வழியிலே பயம்.
எந்த விதத்திலும் இதற்கு அவர்களால் காரணம் சொல்ல முடியவில்லை. அதனால், அந்தப் பிரச்னையைத் திசைதிருப்ப வேண்டும் என்ற குறுகிய எண்ணத்தோடுதான் அ.தி.மு.க ஆட்சிமீது ஊழல் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இரவும் பகலும் முதலமைச்சர் என்ற ஒரு கனவைத் தவிர வேறு எந்தக் கனவும் வருவதில்லை என்று நன்றாகத் தெரிகிறது. ஆனால், அந்தக் கனவை முறியடிப்பதற்குப் பாமர மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதையெல்லாம்விட, எந்தக் காலத்திலும் தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற ராசியுடைய அண்ணன் வைகோ அவர்களுடன் இருக்கிறார். அனைத்தையும் அவரே பார்த்துக்கொள்வார். அதனால், அதுபற்றி எங்களுக்குக் கவலையில்லை” என்றார்.
DINASUVADU