“திமுக என்பது ஒரு குடும்ப கட்சி;தூக்கத்திலிருந்து அமைச்சர் விடுபட வேண்டும்” – ஓபிஎஸ் பதிலடி!

திமுக என்பது ஓர் ஆற்றினைப் போன்றது. ஆனால்,அதிமுக என்பது கடலினைப் போன்றது. ஆறு தான் கடலில் போய் கலக்குமே தவிர, கடல் ஆற்றில் போய் கலக்காது என்று கூட்டுறவுத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் பதில் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் தலைமை இல்லாததே நகர்ப்புற தேர்தலில் டெபாசிட் இழக்கக் காரணம் என்றும்,எதிர்காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருக்காது எனவும்,அது தி.மு.க.வில் சங்கமமாகிவிடும் என்றும் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னதாக கூறியிருந்தார்.

இந்நிலையில்,கூட்டணி பலத்தோடு உள்ளாட்சித் தேர்தலில் செயற்கையான வெற்றியை பெற்றுவிட்டு,அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருக்காது என்றும், அது தி.மு.க.வில் சங்கமமாகிவிடும் என்றும்  கூட்டுறவுத் துறை அமைச்சர் கூறியிருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மேலும்,திமுக என்பது என்பது ஒரு குடும்பக் கட்சி. ஓர் ஆற்றினைப் போன்றது. ஆனால்,அதிமுக என்பது மாபெரும் மக்கள் இயக்கம். கடலினைப் போன்றது.ஆறு தான் கடலில் போய் கலக்குமே தவிர, கடல் ஆற்றில் போய் கலக்காது என்பதை கூட்டுறவுத் துறை அமைச்சருக்கு முதலில் தெளிவுபடுத்திக் கொள்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்,”புகழுரைக் ` கேட்கும்போது,தூற்றுபவரும் உள்ளனர் என்பதை மறவாமலிருக்க வேண்டும்.புகழ்பவர்களே பிறகு இகழ்வார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மயக்கம் ஏற்படாது.” என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். தற்போது மயக்கத்தில் இருக்கிறார் கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழியைப் படித்துவிட்டு மயக்கத்திலிருந்து அவர் விடுபட வேண்டும் எனவும்,

இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்பதையும்,ஒருநாளும் தி.மு.க.வில் சங்கமமாகாது என்பதையும் அமைச்சர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்வதாகவும் ,ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.