பாஜகவின் செயல் வெட்கக்கேடானது! அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு காங்கிரஸ், திமுக, அதிமுக கண்டனம்

Congress: அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் கைதை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதாக டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து அமைச்சர் அதிஷி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ED கைது செய்ததை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இன்றிரவே உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.” என தெரிவித்துள்ளார். இதனிடையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Read More – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது! அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தியின் எக்ஸ் தள பதிவில், “தேர்தல் காரணமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இவ்வாறு குறிவைப்பது முற்றிலும் தவறானது மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது. உங்கள் விமர்சகர்களை தேர்தல் போரில் எதிர்த்துப் போராடுங்கள், அவர்களைத் துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள், நிச்சயமாக அவர்களின் கொள்கைகள் மற்றும் வேலை செய்யும் பாணியைத் தாக்குங்கள், இதுதான் ஜனநாயகம்.

நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும், தலைவர்களும் இரவு பகலாக ED, CBI, IT என அழுத்தத்தில் உள்ளனர், ஏற்கனவே ஒரு முதல்வர் சிறையில், இப்போது மற்றொரு முதல்வரையும் சிறையில் வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்தியாவின் சுதந்திர வரலாற்றில் இது போன்ற வெட்கக்கேடான காட்சி முதன்முறையாகக் காணப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

Read More – கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? டெல்லி இல்லத்தில் அமலாக்கத்துறை விசாரணையால் பரபரப்பு

அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் கூறுகையில், “பா.ஜ.வை யார் எதிர்த்தாலும், சிறை கம்பிகளுக்கு பின்னால் இருந்து தான் போட்டியிட வேண்டும். அக்கட்சியை எதிர்க்கும் கட்சி தங்களின் நிதியை பயன்படுத்த முடியாமல் போகும். இது போன்ற வழக்கில் யார் ஜாமீனில் வெளியே வந்தாலும், அவர்களுடன் கூட்டணி வைக்க பாஜக தயக்கம் காட்டாது” என கூறியுள்ளார்.

Read More – தேர்தல் பத்திரங்கள் : உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி… சீரியல் நம்பர்களுடன் தாக்கல் செய்த SBI.!

திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறுகையில், “பா.ஜ.கவின் மெகா ஊழல், கொள்ளை ஆகியவற்றில் இருந்து சாமானியர்களின் கவனத்தைத் திசைதிருப்ப பிரதமர் மோடி விரும்புகிறார். அதனால்தான் இந்தக் கைது நடவடிக்கை” என கூறியுள்ளார்.