1000 ரூபாய் உரிமை தொகை 1500 ஆக தரப்படும்.. அண்ணாமலை உறுதி.!

Annamalai : மகளிர் உரிமை தொகை 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தி தரப்படும் என கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை கூறினார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று கோவையில் கட்சி கூட்டத்தில் பேசிய பாஜக வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலை மகளிர் உரிமை தொகை பற்றியும் திமுக ஆட்சி பற்றியும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

அவர் கூறுகையில், இந்த முறை 400 எம்பிக்களுக்கு மேல் பாஜக ஜெயிக்கும் போது, நாம் இங்கு இருந்து அனுப்பிய எம்பி பிரதமர் மோடி என்ன சிந்திக்கிறாரோ அதனை இங்கு (கோவையில்) செயல்படுத்தும் நபராக இருக்க வேண்டும். கோவைக்கு மெட்ரோ ரயில் வேண்டுமென்று மோடி கூறினால், இங்கே அதனை அவர் செயல்படுத்த வேண்டும். கோவைக்கு புது தொழிற்சாலை வேண்டும் என்றால் அதனை இங்கு செயல்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நபர் கோவையில் வேண்டும்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக முழுவதும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர்கள் 33 மாத காலமாக தமிழகத்தின் ஆட்சி செய்து வருகிறார்கள். ஆனால், ஒரு தேர்தல் வாக்குவாதியை கூட தாங்கள் நிறைவேற்றியதாக அவர்கள் வாக்கு சேகரிக்கவில்லை.

முதல்வர் அப்படி செய்யாமல், மீண்டும் பாஜக ஆட்சி வந்தால் 1000 ரூபாய் உரிமை தொகையானது நிறுத்தப்படும் என்று கூறி வாக்கு சேகரித்தார். உண்மையில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 1000 ரூபாய் உரிமை தொகையானது 1500 ஆக உயர்த்தி தரப்படும். நான் நிச்சயமாக கூறுகிறேன், தேர்தலுக்கு பின்னர் 1000 ரூபாய் உரிமை தொகையை திமுக அரசு நிறுத்தி விடும். தற்போது அவர்கள் 100 மகளிரில் 70 பேருக்கு உரிமை தொகை தரவில்லை. 30 பேருக்கு தான் உரிமை தொகையை கொடுக்கிறார்கள்.

அதேபோல், தமிழகத்தில் இன்னொரு கட்சி இருக்கிறது. அந்த கட்சி 3000 ரூபாய் உரிமை தொகையை நாங்கள் மத்திய அரசிடம் இருந்து கேட்டு வாங்கி தருவோம் என்று கூறுகிறார்கள். பிறகு நாங்கள் ஏன் இங்கே போட்டியிடுகிறோம். மக்களை முட்டாளாக்க முயற்சி செய்கிறார்கள் என நேற்றைய கூட்டத்தில் பாஜக மாநில தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை பேசினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.