மகிழ்ச்சி…பட்டின பிரவேசம் நடத்த முதல்வர் அனுமதி? – தருமபுரம் ஆதீனம் முக்கிய தகவல்!

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதித்து,மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.இதற்கு பாஜக,பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இதனையடுத்து,தனது உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் தானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பதாகவும் மதுரை ஆதீனம் தெரிவித்தார்.மேலும்,அண்மையில் தமிழக ஆளுநர் தருமபுர ஆதீன மடத்துக்கு சென்றதே தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்க காரணம் எனவும் மதுரை ஆதீனம் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து,தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச நிகழ்வில் விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம் குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

மேலும்,மே 22 ஆம் தேதிதான் பல்லக்கு தூக்கும் நிகழ்வு நடைபெறும் என்பதால் அதற்குள் ஆதீனத்துடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்று அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்திருந்தார்.

இதனிடையே,தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்க தானே வருவதாகவும்,பட்டின பிரவேசத்தை பாஜக நடத்தி காட்டும் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,பட்டின பிரவேசம் நடத்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வாய்மொழி உத்தரவு அளித்துள்ளதாக தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக,செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

“திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு சாதனையை முன்னிட்டு நேற்று முதல்வர் அவர்கள்,பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்தலாம் என்று அறிவித்திருக்கிறார்கள்,அவர்களுக்கு நமது நல்லாசிகள்,இந்த விழாவை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்ற நிலையிலேயே அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் மிகவும் முயன்றார்கள்,அவர்களுக்கும் அறநிலையத்துறை ஆணையர்,செயலர் ஆகியோருக்கு எல்லா நலன்களும் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறோம்.

இதன்மூலம்,மரபுவழி சம்பிரதாயங்களில் எந்தவித மாறுபாடு இல்லாதவர்கள் என்பதை தமிழக அரசு நிரூபித்துள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.இதனிடையே,மயிலம் பொம்மபுரம் ஆதீனம்,சிவஞான பாலய சுவாமிகள், தருமை ஆதீனம் தமிபிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஆதீனங்கள் நேற்று முதல்வரை சந்தித்த நிலையில்,தற்போது பட்டினப் பிரவேசம் நடத்த முதல்வர் வாய்மொழி அனுமதி வழங்கியதாக தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.