#Breaking:அதிமுக பொதுக்குழு;மகிழ்ச்சியில் ஈபிஎஸ் – உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது. இதனிடையே,23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால்,23 தீர்மானங்களும் பொதுக்குழுவில் நிராகரிப்பட்டது. அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு:

இதனையடுத்து,உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும்,தமிழ் மகன் உசேனை அவைத்தலைவராக நியமித்தது செல்லாது என அறிவிக்க கோரியும்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினரும்,ஓபிஎஸ் ஆதரவாளருமான சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

எதற்கு மேல்முறையீடு செய்தீர்கள்?

இதனிடையே,சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து,ஈபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில்,பொதுக்குழு தொடர்பாக ஈபிஎஸ் தொடர்ந்த இந்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,பொதுக்குழு கடந்த ஜூன் 23 ஆம் தேதியே முடிவுற்ற நிலையில்,எதற்கு மேல்முறையீடு செய்தீர்கள்? என ஈபிஎஸ் தரப்புக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

கட்சி விவகாரத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான்:

அப்போது வாதிட்ட ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்:”உயர்நீதிமன்ற உத்தரவை மீறி நாங்கள் செயல்பட்டதாக எங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.அந்த வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.இதனால்,இந்த வழக்கை தொடர்ந்து நடத்த கூடாது என உத்தரவிடுமாறு மேல்முறையீடு செய்துள்ளோம்.ஏனெனில் ஒரு கட்சி விவகாரத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் உயர்நீதிமன்றம் தலையிட முடியும் என தெரிவித்தார்.

விதிமுறைகள் மீறப்படும்போது நீதிமன்றம் தலையிடலாம்:

மேலும்,பொருளாளர் ஓபிஎஸ் ஒத்துழைப்பு தராததால் கட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி கூடுதல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக,அதில் பொருளாளர் கையெழுத்து இடாததால் பணியாளர்களுக்கு ஊதியமும் வழங்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து,வாதிட்ட ஓபிஎஸ் தரப்பு கட்சி விவகாரங்களில் விதிமுறைகள் மீறப்படும்போது நீதிமன்றம் தலையிடலாம் எனவும்,எனவே,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் முறையிட்டது.

பொதுக்குழுவுக்கு தடையில்லை:

இதனைக் கேட்ட உச்சநீதிமன்றம்,உயர்நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.உங்களுக்குள் நட்போ,பிணைப்போ நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறிய நிலையில், பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிராகரிப்பட்டதில் என்ன நீதிமன்ற அவமதிப்பு உள்ளது என ஓபிஎஸ் தரப்புக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

இடைக்கால தடை:

இந்நிலையில்,ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.மேலும்,இந்த விவகாரத்தில் சென்னை உயநீதிம்ன்ற ஒரு நபர் அமர்வுதான் முடிவெடுக்க வேண்டும் எனவும்,மேலும்,ஜூன் 23 அன்று அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் பிறப்பித்த 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற உத்தரவை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.இவ்வழக்கில் நிவாரணம் தேவைப்பட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி அமர்வில் ஓபிஸ் முறையிடலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.இதனைத் தொடர்ந்து,மேல்முறையீட்டு வழக்கில் இருதரப்பும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

Leave a Comment