#BREAKING: ஸ்டெர்லைட் ஆக்சிஜனை நாங்களே பிரித்து கொடுப்போம்.. தடுக்கக்கூடாது – மத்திய அரசு

ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படவுள்ள ஆக்சிஜனை எங்களுக்கு தரவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆக்சிஜன் அலகுகளை தவிர தாமிரம் உட்பட வேறு எந்த அலகுகளையும் ஸ்டெர்லைட் இயக்கக்கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை எங்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம் வைத்துள்ளது.

ஸ்டெர்லைட் ஒப்படைக்கும் ஆக்சிஜனை நாங்கள்தான் மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்போம் என்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாட்டை பொறுத்து ஆக்சிஜனை பிரித்தளிப்போம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசின் கண்காணிப்பின் கீழ் ஸ்டெர்லைட் ஆலை இயக்கம், நிர்வாகம் இருக்கலாம் என நீதிபதி சந்திர சூட் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு விநியோகிப்பதை தடுக்க கூடாது என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு, ஆக்சிஜன் உற்பத்தியில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது தான் எண்களின் கோரிக்கை என எதிர்வாதம் வைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, உள்ளூர் மக்களை கண்காணிப்பு குழுவில் சேர்க்கக்கூடாது என்று ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஆக்சிஜனை மத்திய அரசு மூலம் ஒதுக்கீடு செய்யவேண்டும் என ஏற்கனவே ஒரு உத்தரவு உள்ளதே என நீதிமன்றம் கூறியுள்ளது. கண்காணிப்பு குழுவில் உள்ளூர் மக்களை சேர்க்கும் தமிழக அரசின் முடிவுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம், மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நீதிமன்றம் அனுமதி தந்த 10 நாட்களில் ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கிவிடுவோம் என்றும் ஒரு நாளைக்கு 200 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தயாரிக்க முடியும் எனவும் வேதாந்தா நிர்வாகம் தெரிவித்துள்ளது. உற்பத்தியாகும் ஆக்சிஜனை எந்த மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும் என சொல்கிறீர்களோ அங்கு தருவோம் என்றும் வேதாந்தா நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவதால் அவர்களை கண்காணிப்பு குழுவில் சேர்க்கக்கூடாது என மத்திய வாதம் வைத்துள்ளது. இதனையடுத்து ஸ்டெர்லைட்டை கண்காணிக்கும் குழுவை அமைப்பது தொடர்பாக நீதிமன்றமே ஆணையிடலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்