குஜராத்:72 மணி நேரத்தில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைத்து பனாஸ் பால் கூட்டுறவு சங்கம் சாதனை…!

குஜராத் மாநிலத்தில் உள்ள பனாஸ் பால் உற்பத்தி நிலைய பொறியாளர்கள்,72 மணி நேரத்தில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைத்து சாதனை படைத்துள்ளனர்.

குஜாரத்தில் பால் கூட்டுறவு சங்கத்தின் உதவியுடன் இயங்கி வரும் பனாஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த வாரம் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது.இதனால்,வெளியிலிருந்து ஆக்சிஜன் பெறப்பட்டு நிலைமை சரிசெய்யப்பட்டது.

இதனையடுத்து பனாஸ் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் சங்கர் சவுத்ரி, சொந்தமாக ஆக்சிஜன் தயாரிக்க முடிவு செய்தார்.அதன்படி,பனாஸ் பால் உற்பத்தி நிலையத்தின் அனைத்து பொறியாளர்களும் இணைந்து 72 மணி நேரத்தில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை நிறுவியுள்ளனர்.

இதுகுறித்து பால் உற்பத்தி நிலையத்தின் மூத்த பொதுமேலாளர் பிபின் படேல் கூறுகையில்,”ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான ஏர் கம்ப்ரஸர் மற்றும் ஏர் ட்ரையர் போன்ற உபகரணங்கள் தற்போது சந்தைகளில் கிடைக்கவில்லை.மேலும்,மிக அவசரமான காலகட்டத்தில் நாம் இருப்பதால் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை நிறுவது பற்றி திட்டமிட்டோம்.

அதனால்,பிரஸர் ஸ்விங் தொழில்நுட்பத்தின் மூலமாக ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடிவெடுத்து இந்த புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை 72 மணி நேரத்தில் நிறுவியுள்ளோம்.மேலும்,இந்த நிலையத்தில் இருந்து 93-96 சதவீதம் தூய்மையான ஆக்சிஜன் கிடைக்கும்”,என்று கூறியுள்ளார்.