சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வேளையில்,தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் சற்று முன்னர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும்,கைதி விக்னேஷ் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து,கைதி விக்னேஷ் மரணத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில்,கைதி விக்னேஷ் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற முதல்வர் உத்தரவிடாததை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஈபிஎஸ் கூறியதாவது:”இந்த வழக்கை கொலை வழக்காக பதிய முதல்வரே உத்தரவிட்டுள்ளார்.அப்படியிருக்க தமிழக காவல்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது.
இதனால்தான்,கைதி விக்னேஷ் மரணம் தொடர்பான வழக்கு நேர்மையாக,நியாயமாக நடைபெற வேண்டும் என்றால் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்.ஆனால்,இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்காமல் முதல்வர் சிபிசிஐடியிடம் ஒப்படைத்த காரணத்தினால்தான் அதை எதிர்த்து வெளிநடப்பு செய்தோம்.
அதே சமயம்,தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் காலம் காலமாக நடைபெறும் நிகழ்வு.குறிப்பாக,ஆளுநர் எல்லைக்குள்ளே நடைபெறும் இந்த நிகழ்வை தடை செய்ய அரசுக்கு அதிகாரம் இல்லை.இருந்தாலும் வேண்டும் என்றே திட்டமிட்டு சில அரசியல் காரணத்திற்காக மாவட்ட வருவாய் துறை தடை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
எனினும்,முதல்வர் பொதுவானவர்,எல்லா மதத்திற்கும் சமமானவர்.எந்த மதத்தையும் சாராதவர்.அப்படியிருக்க பல்வேறு மதங்களுக்கு பண்டிகை காலத்தில் வாழ்த்து சொன்ன முதல்வர் தீபாவளி காலத்தில் ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்று தெரியவில்லை”,என்று தெரிவித்துள்ளார்.