விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்!

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், டெல்லியில்  போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க சார்பில் மாநிலம் முழுவதும் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தற்போது டெல்லியில் ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்திர பிரதேச விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி  வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், டெல்லியில்  போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க சார்பில் மாநிலம் முழுவதும் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்.பி.தயாநிதி மாறன் பங்கேற்றுள்ளார். விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்க செல்லும் திமுகவினர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.ஓமலூர், அயோத்தியாப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் ஸ்டாலின் தலைமையிலான போராட்டம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.