- 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் வெளியாகி விட்டன.
- இதில் ஊரக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக அமமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக கட்சியில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்தன. இதில் ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக, திமுகவிற்கு எதிராக சுயேட்சையாக நின்று டிடிவி.தினகரன் வெற்றிபெற்றார். அதன் பிறகு நடந்த மக்களவை தேர்தலின் போது அமமுக எனும் கட்சியை தொடங்கி களமிறங்கினார். அதில் எந்த தொகுதியிலும் வெற்றிபெறவில்லை என்றாலும், கணிசமான வாக்கு சதவீதத்தை பெற்றார்.
அதன் பிறகு நடைபெற்ற சில இடைத்தேர்தல்களில் அமமுக போட்டியிடவில்லை. இதனால் அக்கட்சி காணாமல் போய்விட்டது என அரசியல் வட்டாரத்தில் பேசி வந்தனர். அக்கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்ற கட்சியில் ஐக்கியமானார்கள்.
அதன் பிறகான தற்போது நடைபெற்ற 27 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு அடுத்தபடியாக 95 ஊராட்சி ஒன்றியங்களை அமமுக வேட்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இது பிரதான கட்சிகளை அதிர்ச்சியடையவைத்துள்ளது.