அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள்-விஜய் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்று விஜய் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசுகையில்,  யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருக்க வேண்டும்.மேலும் சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள். யார் மீது பழி போட வேண்டுமோ, அதைச் செய்யாமல் லாரி ஓட்டுநர் மீது பழிபோடுகிறார்கள் என்று பேசினார்.ஆனால் விஜயின் இந்த கருத்துக்கு ஆளும் கட்சியினர்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  விஜய்யோ, கவுண்டமணியோ, செந்திலோ யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்றும் ஆனால் அவர்கள் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பதைதான் சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆளும் தரப்பை தொட்டால்தான் ஆளாக முடியும் என தொடுகிறார்கள் .ஆனால் அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது வரலாறு.படம் ஓடுவதற்காக அதிமுகவை விஜய் இவ்வாறு பேசுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.