#Breaking:அதிமுக உட்கட்சி தேர்தல்;ஈபிஎஸ் மேல்முறையீடு – உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

அதிமுக உட்கட்சி தேர்தல் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற நிலையில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்,இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் ஆகியோர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.ஆனால்,இதனை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க கோரி கே.சி.பழனிசாமி மகனான சுரேன் பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக மனுதாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது:தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்,அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டது,கட்சியின் விதிகளுக்கு எதிரானது என்றும், ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளருக்கு கட்சியின் பொதுச்செயலாளரின் அதிகாரங்களை வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் எனவும்,கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட அதிமுக உட்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

ஆனால்,அதிமுக கட்சியின் உறுப்பினர்களாக அவர்கள் இல்லாத நிலையில்,அதிமுக உட்கட்சி தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக வழக்கு தொடர உரிமையில்லை என்பதால்,வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் தாங்கள் உறுப்பினர்களாக உள்ளதாகவும்,உறுப்பினர் அட்டை புதுப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால்,கட்சி உறுப்பினர் அட்டையை புதுப்பித்ததாக கூறும் மனுதாரர்கள் தாக்கல் செய்த ஆவணம் போலியானது என அதிமுக தரப்பில்  வாதிடப்பட்டது.இதனால்,உண்மையான உறுப்பினர் அட்டையை தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து,மனுதாரர்களின் அடையாள அட்டையை பரிசோதித்து இவர்கள் இருவரும் அதிமுக உறுப்பினர்கள் என்பதை உறுதி செய்து, உட்கட்சி தேர்தல் தொடர்பாக மனுதாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில்,அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து ஈபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.உட்கட்சி தேர்தலை எதிர்த்து ராம்குமார் ஆதித்தன்,சுரேன் பழனிசாமி வழக்கு தொடர தனி நீதிபதி அனுமதி தந்ததற்கு எதிராக மனுதாக்கல் செய்வதற்கு ஏற்பட்ட தாமதத்தை ஏற்று வழக்கை பட்டியலிட வேண்டும் என ஈபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து,ஈபிஎஸ் மேல்முறையீடு மனுவை அப்பீல் செய்ய அனுமதி அளிப்பது குறித்து ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி நான்கு வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment