இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்து, குடும்பத்திற்கு 5000 ரூபாய் நிதி அளித்திட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்து, குடும்பத்திற்கு 5000 ரூபாய் நிதி அளித்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  டிசம்பர் 2019 உடன் ஒப்பிடும் போது வேலை வாய்ப்பின்மை 10 மடங்கு உயர்ந்து தமிழகத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் 49.8% அதிகரித்திருக்கிறது. ஒழுங்குமுறையில்லாமல் ஊரடங்கை நீட்டித்து டாஸ்மாக்கைத் திறந்து, பிழைப்பு தேடிச் செல்வோரை தடுத்து, இ-பாஸ் மூலமாக மக்களை முடக்கிவிட்டது அதிமுக அரசு.

அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை மற்றும் மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்’ இணைந்து நடத்திய ஆய்வில், மார்ச் முதல் மே வரையிலான 3 மாதங்களில் தமிழ்நாட்டில் 53% வீடுகளில் தலா ஒருவர் இழந்திருக்கிறார்.கிராமப்புறங்களில் 56%, நகர்ப்புறங்களில் 50 %  குடும்பங்களில் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது .கிராமப்புறங்களில் 92%, நகர்ப்புறங்களில் 95 %  வீடுகளில் வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அமைப்புசாரா தொழிலாளர்கள் 83.4% பேர் வேலையை இழந்திருக்கிறார்கள். ‘முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம்’, ‘புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறோம்’ என பொய்களை தினமும் கட்டவிழ்க்கிறார்கள்.

தி.மு.க சொன்ன போது கேட்காத முதலமைச்சர் அரசே நடத்தியுள்ள ஆய்வின் தகவல்களையாவது ஏற்றுக்கொள்ள வேண்டும். இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்து, குடும்பத்திற்கு 5000 ரூபாய் நிதி அளித்திட வேண்டும்.முதலீட்டாளர் மாநாடுகள் வெளிநாடு சுற்றுலா மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பெறப்பட்ட முதலீடுகள், உருவாக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.