18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: 6 வழக்குகளின் விசாரணை முடிந்த பிறகே 7வது வழக்காக தகுதிநீக்க வழக்கு விசாரணை!

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சற்று நேரத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ள நிலையில் வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்தடைந்துள்ளனர்.அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்,முதல்வர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால் வந்துள்ளனர். தலைமை நீதிபதி அறை,வழக்கறிஞர்கள் அமரும் பிரிவில் கூட்டம் நிரம்பியுள்ளது.

பின்னர் 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பளிக்க உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர், நீதிபதி இந்திரா பானர்ஜி வந்துள்ளனர்.

இந்நிலையில்  6 வழக்குகளின் விசாரணை முடிந்த பிறகே 7வது வழக்காக தகுதிநீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.

முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை:

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கும் நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் தலைமை வழக்கறிஞருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை ஈடுபட்டுள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் தலைமை வழக்கறிஞருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை ஈடுபட்டுள்ளனர்.ஆலோசனையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் பங்கேற்றுள்ளனர்.

டிடிவி தினகரன் அணி ஆலோசனை:

டிடிவி தினகரன் இல்லத்திற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல் .ஏக்கள் திருப்போரூர் கோதண்டபானி, தஞ்சாவூர் ரெங்கசாமி, சோலிங்கர் பார்த்திபன், ஆம்பூர் பாலசுப்ரமணி, மானாமதுரை மாரியப்பன் கென்னடி, பெரம்பூர் வெற்றிவேல் ஆகியோர் வந்தனர்.

தற்போது டிடிவி தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் துவங்கியது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை ஆலோசனை கூட்டத்தில் விளத்திக்குளம் உமாமகேஸ்வரி, குடியாத்தம் ஜெயந்தி பத்பநாபன் ஆகிய இருவர் மட்டுமே பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.இதனால் தினகரன் அணி சற்று பீதியாகவே உள்ளது.

இன்னும் சற்று நேரத்தில்:

இன்று டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

அதிமுகவில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் 19 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ஆம் தேதி தமிழக ஆளுநரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், தமிழக முதலமைச்சர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இதனையடுத்து அவர்கள் 19 பேருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடங்கின. இதனிடையே ஆளுநரிடம் மனு கொடுத்தவர்களின் ஒருவரான ஜக்கையன், தனது நிலையை மாற்றிக் கொண்ட நிலையில் எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென கோரி, அதிமுக கொறடா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ஆம் தேதி சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார்.

இதன் பேரில் 18 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இந்நிலையில் சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து, 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எம். துரைசாமி மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்துவதற்கான எந்த அறிவிப்பாணையும் வெளியிடக்கூடாது.

அதேபோல மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பையும் நடத்தக்கூடாது என உத்தரவிட்டார். இந்நிலையில் அக்டோபர் மாதம் முதல் நீதிபதி கே. ரவிசந்திரபாபு வழக்கை விசாரிக்க தொடங்கினர்.

ஆனால் நவம்பர் 2 ஆம் தேதி அன்று நீதிபதி கே.ரவிசந்திரபாபு வழக்கின் முக்கியத்துவத்தை கருதி தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்தார். இதன் பேரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 – ஆம் தேதி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் 18 எம்.எல்.ஏ தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

முறையீட்டை ஏற்ற நீதிபதிகள் நவம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் வழக்கை முதல் அமர்வே விசாரிக்கும் என அறிவித்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 தேதி – ஆம் தேதி முதல் தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு விசாரணை தொடங்கியது.

கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தது. ஜனவரி மாதம் 23 – ஆம் தேதி அன்று அனைத்து தரப்பும் எழுத்து பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அன்று தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு. இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட உள்ளது

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment