“சென்னையில்தான் அதிகம்…நிலைமை கை மீறிப் போவதற்குள் அரசு இதனை செய்ய வேண்டும்”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

சென்னை:கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என்றும்,சென்னையில் கொரோனா பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு வார்டு வாரியாக நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நேற்று மட்டும் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக,சென்னையில் மட்டும் 5,098 பேருக்கு நேற்று கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில்,சென்னையில் கொரோனா பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு வார்டு வாரியாக நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், நிலைமை கை மீறிப் போவதற்குள் தமிழக அரசு உடனடியாக செயல்பட வேண்டியது அவசியம் எனவும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக,அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் அதிகமானோர் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருப்பதால்,தலைநகரில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்.

அடுத்து பொங்கல் பண்டிகை வருவதால் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் மூலமாக நோய் பரவல் தமிழகம் முழுவதும் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.எனவே,அரசு இதனை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.

சென்னையில் கொரோனா பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு வார்டு வாரியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.நிலைமை கை மீறிப் போவதற்குள் தமிழக அரசு உடனடியாக செயல்பட வேண்டியது அவசியம்”,என்று தெரிவித்துள்ளார்.