கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் பலி; 7 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கள்ள சாராயம் அருந்திய 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஒருவர் யாரென்று தெரியவில்லை எனவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய காவல் கண்காணிப்பாளர் உபேந்திரநாத் வர்மா அவர்கள் இது இயற்கைக்கு மாறான ஒன்று எனவும், முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் பின்பு தான் மேலும் இது குறித்த தகவல்கள் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மது அருந்திய நபர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஐந்து தினங்களுக்கு முன்புதான் பீகாரில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் கள்ள சாராயம் அருந்திய ஐந்து பேர் உயிரிழந்தனர். தற்போதும் 9 பேர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Rebekal