தபால் நிலையங்களில் வங்கி சேவை…!! மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்.

நாகர்கோவில்,
இந்திய அஞ்சல் துறை, வங்கித்துறையில் கால்பதிக்கும் விதமாக “இந்தியா போஸ்ட் பேமண்ட் பேங்க் (இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி)“ என்ற பெயரில் அஞ்சல் வங்கி சேவை திட்டம் நாளை (சனிக்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது. பிரதமர் நரேந்திரமோடி இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தில் கணக்கை தொடங்க விரும்புபவர்கள் தங்கள் பகுதி தபால்காரர்களை வரவழைத்து தங்கள் வீட்டில் இருந்தபடியே கணக்கை தொடங்கலாம். கணக்கை தொடங்கியவர்கள் கணக்கில் இருக்கும் பணத்தைப்பெற வங்கியை நாடிச்செல்ல வேண்டியதில்லை. தபால்காரர்களை வீட்டுக்கு அழைத்து அவர் மூலமாகவே பணமும் பெற்றுக் கொள்ளலாம்.
பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததும், நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரஇருக்கிறது. கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம், நாகர்கோவில் டவுண் தபால் நிலையம், மருங்கூர் துணை தபால் நிலையம், இரவிபுதூர் மற்றும் குமாரபுரம் தோப்பூர் கிளை தபால் நிலையங்கள் என மொத்தம் 5 தபால் நிலையங்களில் இந்த அஞ்சல் வங்கி சேவை திட்டம் தொடங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் தொடக்க விழா நாகர்கோவில் இந்துக்கல்லூரியில் நாளை பிற்பகல் 2.30 மணி அளவில் நடைபெறுகிறது. விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைக்கிறார். விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே, தென்மண்டல அஞ்சல்துறை தலைவர் வெண்ணம் உபேந்தர், கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வி.பி.சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
“இந்தியா போஸ்ட் பேமண்ட் பேங்க்“ என்ற அஞ்சல்துறை வங்கி சேவை திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி வருகிற 1–ந் தேதி தொடங்கி வைக்கிறார். குமரி மாவட்டத்தில் முதல்கட்டமாக 5 தபால் நிலையங்களில் இந்த வங்கித்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குமரி மாவட்டத்தில் மொத்தம் 267 தபால் நிலையங்கள் உள்ளன. அவை அனைத்திலும் 3 மாதத்துக்குள் இந்த வங்கி சேவைத்திட்டம் கொண்டுவரப்படும். குமரி மாவட்ட தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்குகளை பொறுத்தவரையில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 605 உள்ளன.
DINASUVADU 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment