கவர்னரின் பெயரை ​நாய்க்கு வைத்து சர்ச்சையை கிளப்பிய காங்கிரஸ் தலைவர்!

மகராஷ்டிர காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் ,கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா குறித்து  கூறியுள்ள கருத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத்திற்கான தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சி என்ற முறையில் 104 தொகுதிகளை கைப்பற்றிய பாஜவின் எடியூரப்பாவை ஆட்சியமைக்க வருமாறு அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார்.

தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை ஏற்படுத்திய காங்கிரஸ் – ம.ஜ.த கட்சிகள் தங்களிடம் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இருப்பதாகவும் ஆனால் ஆளுநர் எங்களை புறக்கணித்துவிட்டு பெரும்பான்மையில்லாத பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தது தவறு என்றும் சுட்டிக்காட்டி போராட்டத்தில் ஈடுபட்டன. இது ஆளுநருக்கு எதிராக சர்ச்சையை ஏற்படுத்தியது.

பின்னர், இது குறித்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் முறையீடு செய்தன. விடிய விடிய நடைபெற்ற விசாரணையின் முடிவில் நேற்று  மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எடியூரப்பாவிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பெரும்பான்மையை நிரூபிக்கும் நடைமுறையை மேற்கொள்ள மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்த நிலையில், போபையாவை இடைக்கால சபாநாயகராக ஆளுநர் நியமித்தார்.

மூத்த உறுப்பினரை நியமிக்காமல் ஆளுநர் புறக்கணித்துவிட்டதாக மீண்டும் காங்கிரஸ் கூட்டணி உச்சநீதிமன்றம் சென்றது.நேற்று  காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த விவகாரத்தில் இடைக்கால நியமனத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்தது.

இந்த இரண்டு விவகாரங்களும் ஆளுநர் மீது காங்கிரஸ் கூட்டணிக்கு அதிருப்தியை ஏற்படுத்தின.

இந்நிலையில், கர்நாடக சட்டமன்றத்தில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னதாகவே தனது முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்றத்தில் உருக்கமான உரையாற்றினார்.

எடியூரப்பா ராஜினாமா செய்ததை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டன. நாடு முழுவதுமுள்ள காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக மகராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், உண்மையாக இருப்பதில் நாட்டிலேயே புதிய சாதனையை வஜூபாய் வாலா படைத்திருப்பதாக குறிப்பிட்டதுடன், இனி ஒவ்வொரு இந்தியனும் அவர்கள் வளர்க்கும் நாய்களுக்கு வஜூபாய் வாலா எனப் பெயரிடுவர், ஏனெனில் இவரை விட யாராலும் உணமையாக இருக்க முடியாது என்றார்.

காங்கிரஸ் தலைவரின் இக்கருத்து கடும் சர்ச்சையையும், பாஜகவினரிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment