சபரிமலைக்கு தரிசனம் மேற்கொள்ள அங்கு சென்ற 4 பெண் பக்தர்கள் இன்று இந்துமத அமைப்பைச் சேர்ந்த போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இன்று தரிசனத்திற்காக பாலம்மா என்ற பெண் சபரிமலையின் மேல் நடைபாதை வரை சென்றதால் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். பின்பு அவர் போராட்டக்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், சபரிமலைக்கு இன்று ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வசந்தி மற்றும் ஆதிசேசி என்ற இரு பெண் பக்தர்கள் வந்தபோது அவர்களை இந்துமதவாத அமைப்பினர் சிலர் பம்பையிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் திருப்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும் இன்று பம்பையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.
உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலையினுள் அனுமதிக்கப்பட வேண்டுமென்ற தீர்ப்பை அளித்ததிலிருந்து ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க மற்றும் அதன் சங்பரிவாரங்கள் வேண்டுமென்றே போராட்டங்களை தூண்டி சபரிமலையில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றன. இதேபோன்று பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் சில இடங்களில் நீதிமன்ற தீர்ப்புகள் வந்தபோது பா.ஜ.க அதை நிறைவேற்றியுள்ளபோது தற்போது கேரளாவில் அரசியல் ஆதாயத்திற்காக போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU