வேலூர் கோட்டை யாருக்கு ?இன்று தெரிகிறது முடிவு

வேலூர் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை  நடைபெறுகிறது.

வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது .பின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதில்,வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5- ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தெரிவித்தது.

வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார். வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ,திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.ஆகஸ்ட் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது . மக்கள் அனைவரும் மிகவும் ஆர்வமுடன் வாக்கு அளித்தார்கள்.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.வேலூர் மக்களவை தேர்தலில் மொத்தமாக 72% வாக்குகள் பதிவாகியது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில்,வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று  காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 10-11 மணியளவில் முன்னணி நிலவரம் தெரியவரும். வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்  என்றும் தெரிவித்தார்.