இனி அமமுக இல்லை,அதிமுகத்தான் ..! முதல்வர் துணை முதல்வர் முன்னிலையில் இணைந்த முக்கிய நிர்வாகி

  • சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார் புகழேந்தி.
  • முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

அமமுகவின் கர்நாடக மாநில செயலாளராக  இருந்த புகழேந்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தது.இந்த வீடியோவில் தினகரனுக்கு முகவரி அளித்தது நான் தான் என்று தெரிவித்தார்.இந்த சம்பவம் அமமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தினகரன் மற்றும் புகழேந்தி  இருவருக்கும்  இடையே கருத்து மோதல்  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது.

இதனால் கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தி மாற்றம் செய்யப்பட்டார்.அதாவது கர்நாடக மாநில அமமுக செயலாளராக எம்.பி.சம்பத் நியமனம் செய்து டிடிவி தினகரன் அறிவித்தார்.இதற்கு முன்னதாக புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு செய்யப்பட்டது.சேலத்தில் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இது குறித்து புகழேந்தி கூறுகையில்,வெளிநாடு சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வந்தவுடன் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைவேன் என்று  புகழேந்தி தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார் புகழேந்தி. அங்கு முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.மேலும்  அவரது ஆதரவாளர்களும், அதிமுகவில் இணைந்தனர்.