தமிழக பட்ஜெட் 2019:மடிக்கணினி வழங்குவதற்காக 1362 கோடி ரூபாய் ஒதுக்கீடு

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் எட்டாவது முறையாக இன்று  பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20ம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும்.2019 – 2020ல் தமிழக அரசின் கடன் ₹3,97,495 கோடியாக இருக்கும்.அதேபோல் செலவீனங்கள், 208617 கோடியாக இருக்கும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,178 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • குடிநீர் வழங்கல் துறைக்கு 18,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வீட்டு வசதி துறைக்கு 6,265 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு 1,031 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பள்ளிக்கல்வித்துறைக்கு 28,757 கோடி  ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • உயர்கல்வித்துறைக்கு 4,584 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சுகாதாரத்துறைக்கு 12,563 கோடி  ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2,681 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • போக்குவரத்து துறைக்கு 1297 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கால்நடைத்துறைக்கு 1,252 கோடி ரூபாய் ஒதுக்கீடு, பால்வளத்துறைக்கு 258 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மீன்வளத்துறைக்கு 927 கோடி ரூபாய் ஒதுக்கீடு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 13,605 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 2,00,000 நான்கு சக்கர வாகனங்கள்,2,00,000 இரு சக்கர வாகனங்களை நிறுத்தக்கூடிய அளவில் வாகன நிறுத்த வசதிகள், பன்னடுக்கு வாகன நிறுத்த வசதிகள் மறறும் சாலையோர திறன்மிகு வாகன நிறுத்தம் ஆகியவற்றை செயல்படுத்த விரிவான ஒருங்கிணைக்கப்பட்ட வாகன நிறுத்த மேலாண்மைத் திட்டத்தை, அரசு-தனியார் பங்களிப்பு முறையின் கீழ் ரூ.2,000 கோடி  செலவில் சென்னை நகரில் தமிழக அரசு செயல்படுத்தும். தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம் இத்திட்டத்திற்குத் தேவையான நிதியுதவியை அளிக்கும்.
  • அதேபோல்  முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய 2019-2020 ஆம் ஆண்டில் 20,000 வீடுகள் கட்டித்தரப்படும். ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்.
  • அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் ஆகியவற்றின் கீழ் நிலுவையில் உள்ள 2,109 கோடி மற்றும், 1,092 கோடி ரூபாயை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை.
  • முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்தபடி, கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் சேதமடைந்த குடிசைகளுக்கு மாற்றாக ஒரு வீட்டுக்கு 1.70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு இலட்சம் வீடுகளுக்கு 1,700 கோடி ரூபாய் திட்டமதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
  • திட்டச் செலவில் 720 கோடி ரூபாயை மத்திய அரசு தனது பங்காக ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கிறேன். மீதமுள்ள 980 கோடி ரூபாயை மாநில அரசின் பங்குத்தொகையாக தமிழ்நாடு ஊரக வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் மூலம் கடன் பெற்று இத்திட்டம் நிறைவேற்றப்படும்
  • அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நலனுக்காக 55,399 கோடி ரூபாயும், ஓய்வூதிய பலன்களுக்காக 29,627 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  • 14 வது நிதிக்குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்திய பின்னர், மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களில் தனது பங்கை மத்திய அரசு கணிசமாக குறைத்துள்ளது. இதனால் மாநில அரசின் நிதிச்சுமை மேலும் அதிகரித்துள்ளது.
  • 2019-20 ஆம் ஆண்டில் மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் உதவி மானியங்கள் 25602 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • 2016 பிரதமர் பயிர்காப்பீட்டு திட்டத்தில் புதிய பயிர்களையும், பகுதிகளையும் சேர்க்க அறிவிப்பு செய்யவுள்ளது. குறிப்பிட்ட பகுதிக்குள் ஏற்படும் இடர்பாடுகளான ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளோடு இடி மற்றும் மின்னலுடன் கூடிய திடீர் மழை ( Cloud Burst ) மற்றும் இயற்கை தீயினால் ( Natural fire ) ஏற்படும் பாதிப்புகளும் இத்திட்டத்தில் சேர்க்கப்படும்.
  • மத்திய அரசின் நிதியுதவி உட்பட மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் 1,97,721 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் நிலைத்து செயல்பட அவற்றை ஒருங்கிணைப்பது அவசியத் தேவையாக உள்ளது. உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை மாநில அளவிலும், மண்டல அளவிலும் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.
  • தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கையின் கீழ் வானூர்தி மற்றும் ராணுவத்தளவாடங்களை அமைப்பவர்களுக்கு உரிய ஊக்கம் அளிக்கப்படும்.
  • மொத்தம் 2,000 மின்சார பேருந்துகள் வாங்கப்படும்.அதில் சென்னை,கோவை, மதுரையில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்
  • 2011-12 ஆம் ஆண்டில் 63,178 ஆக இருந்த பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையானது 2018-19 ஆம் ஆண்டில் 33,519 ஆக குறைந்துள்ளது.
  • பள்ளிக்கல்வித் துறையில் புத்தகப்பைகள், காலணிகள், நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள் உள்ளிட்டவைகளை விலையில்லாமல் வழங்க 1,656 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 2019-20 ஆம் ஆண்டில் மடிக்கணினி வழங்குவதற்காக 1362 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வரும் ஆண்டில் 80 ஆழ்கடல் மீன்பிடி படகுக்களுக்கு 240 நேவிக் தகவல் பெறும் கருவிகள் , 160 ஐசாட்-2 செயற்கைக்கோள் தொலைபேசிகள் மற்றும் 160 நேவ்டெக்ஸ் கருவிகளையும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது என்று பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment