துபாயில் இன்று உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு! தலைவர்கள் பங்கேற்பு!

உலக முழுவதும் காலநிலை மாற்றம் என்பது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. பருவம் தவறிய மழை, வெள்ளம் புயல் உள்ளிட்டவற்றால் பல நாடுகள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சனைகள் அனைத்தும் பூமி வெப்பமடைவதால் நடக்கிறது என கூறப்படுகிறது. இதனால், அதனை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பூமி வெப்பமயமாதல், காலநிலை மாற்ற உள்ளிட்ட பிரச்சனைகளை சரிசெய்ய உலக நாடுகளின் தலைவர்கள் பலர்  தொடர்ந்து திட்டங்களை தீட்டி வருகின்றனர். இந்த நிலையில், உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு (COP-28) இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.

2 நாட்கள் பயணமாக துபாய் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு..!

இன்று துபாயில் தொடங்கும் காலநிலை உச்சி மாநாட்டில், துபாயில் பல்வேறு உலக தலைவர்கள், 130க்கும் மேற்பட்ட மாநில தலைவர்கள் மற்றும் அரசுகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர்.  சர்வதேசத் தலைவர்கள் பலரும் வருகை தந்துள்ள நிலையில், துபாயில் தொடங்கியுள்ள ஐ.நா.வின் COP28 மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறும் சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு அதிக கவனம் பெற்றுள்ளது.

COP28 உச்சி மாநாடானது டிசம்பர் 12 வரை துபாயில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை ஐக்கிய அரபு அமீரகம் ஏற்று நடத்துகிறது. இதில், காலநிலை மாற்றத்தைத் தடுப்பதில் கூட்டு முயற்சியை வலியுறுத்தப்படும். கரியமிலவாயு உமிழ்தலைக் கட்டுப்படுத்துவதில் உள்ள நிதிச் சிக்கல் பற்றியும், வறுமையில் உள்ள நாடுகளுக்கு காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளித்தல் பற்றியும் விவாதிக்கப்படும்.

இந்த நிலையில், காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் துபாய் புறப்பட்டு சென்றார். துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றும் பிரதமர் மோடி, முதல் இரண்டு நாட்களில் துபாயில் இருக்கிறார். அங்கு அவர் உலகளாவிய தலைவர்கள் மற்றும் வணிக சமூகத்தின் உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்