சென்னையில் இன்று மகளிர் உரிமை மாநாடு! 5 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் வந்த சோனியா காந்தி!

திமுக மகளிர் அணி சார்பில் இன்று (அக். 14) சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என்று தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி அறிவித்திருந்தார். இதுதொடர்பாக எம்.பி. கனிமொழி வெளியிட்டிருந்த அறிக்கையில்,  அனைத்து துறைகளிலும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண்ணுரிமைக்காகவும் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் மகத்தான பணிகளை ஆற்றியுள்ளார். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் வாயிலாக, பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை அடுத்தடுத்துச் செயல்படுத்தி வருகிறார்.

எனவே,  மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமை தொடர்பான கருத்துரையாடலை முன்னெடுப்பதை காலத்தின் தேவையாகக் கருதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மகளிர் அணி சார்பில் இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் திமுக மகளிர் அணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ நடைபெறுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடக்கும் மாநாட்டில் இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். அந்தவகையில், மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்னை வந்தனர். இதில், குறிப்பாக மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் 5 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாடு வந்துள்ளார் சோனியா காந்தி.

சென்னை வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சென்னை விமான நிலையத்தில் புத்தகம் வழங்கி முதலமைச்சர் முக ஸ்டாலின் வரவேற்றார். அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளிட்டோர் விமான நிலையத்துக்கு நேரில் சென்று சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை வரவேற்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்