டிராவிட்டிற்கு பதிலாக முக்கிய பதவிக்கு பொறுப்பேற்கவுள்ள விவிஎஸ் லட்சுமண்!

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட்டிற்கு பதிலாக விவிஎஸ் லட்சுமண் பொறுப்பேற்க உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைந்ததால், அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்து வந்த முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப் பட்டார்.அதன்படி,வரும் 17 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து டிராவிட் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.

இதனால், டிராவிட் வகித்த தேசிய கிரிக்கெட் அகாடமி பதவிக்கு புதிய தலைவரை நியமிப்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை மேற்கொண்டு வந்தது.மேலும்,டிராவிட்டிற்குப் பிறகு சிறந்த முறையில் பொறுப்பேற்கக்கூடிய ஒருவரைக் கொண்டிருக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிசிசிஐ வட்டாரம் இந்தியா டுடேவிடம் உறுதிப்படுத்தியது.

இந்நிலையில்,முன்னாள் இந்திய பேட்டர் விவிஎஸ் லட்சுமண் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.இதனை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி இன்று  உறுதிப்படுத்தியுள்ளார்.இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு  இப்பதவிக்கு ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

லட்சுமண் உள்நாட்டு கிரிக்கெட்டில் பெங்கால் அணியின் பேட்டிங் ஆலோசகராக உள்ளார், மேலும் இந்தியன் பிரீமியர் லீக்கில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் வழிகாட்டியாகவும் உள்ளார். இது தவிர,46 வயதான சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனான லக்‌ஷ்மண், இந்திய அணிக்காக 134 டெஸ்ட் போட்டிகளில் 17 சதங்களுடன் மொத்தம் 8781 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.