உபி:குரங்குகளின் தாக்குதல்:2 வது மாடியில் இருந்து குதித்த பாஜக தலைவர் அனில் குமாரின் மனைவி உயிரிழந்தார்..!

உத்தரப் பிரதேசத்தில் குரங்குகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்த பாஜக தலைவரின் மனைவி உயிரிழந்தார்.

உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அனில் குமார் சவுகானின்,மனைவி குரங்குகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

50 வயதான சுஷ்மா தேவி, கைரானா நகரில் உள்ள அவரது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார்.அப்போது,அவரை ஒரு குரங்குக் கூட்டம் சுற்றி வளைத்ததாக கூறப்படுகிறது.இதனால்,குரங்குகள் தாக்குதலை தவிர்க்கும் பொருட்டு, சுஷ்மா மாடியிலிருந்து குதித்தார்.

கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.எனினும்,மருத்துவர்கள் வருவதற்குள் அவர் இறந்துவிட்டார்.

மேலும்,சம்பவம் நடந்தபோது அவரது கணவர் அனில் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.உள்ளூர் பாஜக தலைவரான அனில் மறைந்த முன்னாள் எம்.பி. ஹுகும் சிங்கின் மருமகன் ஆவார்.

இதேபோல கடந்த திங்களன்று, இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் 11 வயது சிறுவன், குரங்கிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கட்டிடத்திலிருந்து விழுந்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.