#Flash:முதல் முறையாக பிரபஞ்சத்தின் ரகசியத்தை புகைப்படம் எடுத்த நாசா – அதிபர் ஜோ பைடன் வெளியீடு!

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எடுத்த பிரபஞ்சத்தின் முதல் ஆழமான புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.

விண்வெளியில் உள்ள பல அறிந்திடாத அதிசயங்களை கண்டறியும் பணியில் உலக நாடுகளுடன் இணைந்து நாசா தொடர்ந்து முயன்று வருகிறது.அந்த வகையில்,கனடா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளின்  விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து அமெரிக்காவின் நாசாவானது ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியுள்ளது.இந்த தொலைநோக்கியானது சுமார் 80,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில்,பூமியிலிருந்து 10 லட்சம் மைல்கள் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,நாசா தனது ஜேம்ஸ் வெப் என்ற புதிய விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுத்த பிரபஞ்சத்தின் படங்களில் முதல் வண்ணப் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிட்டுள்ளார்.மேலும்,”வெப் விண்வெளி தொலைநோக்கியின் முதல் படம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஒரு வரலாற்று தருணத்தை பிரதிபலிக்கிறது என்று பைடன் தெரிவித்துள்ளார்.

ஏனெனில்,இதுவரை கைப்பற்றப்படாத பிரபஞ்சத்தின் மிக ஆழமான முதல் வண்ணப் புகைப்படக் காட்சியை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி வழங்கியுள்ளது.நாசாவின் கூற்றுப்படி,ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் இந்த முதல் வண்ணப் புகைப் படம் இன்று வரை தொலைதூர பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் கூர்மையான அகச்சிவப்பு படமாகும். ‘வெப்ஸ் ஃபர்ஸ்ட் டீப் ஃபீல்ட் என்று அழைக்கப்படும்,இந்த கேலக்ஸி கிளஸ்டர் SMACS 0723 இன் புகைப்படம் இதுவரை கிடைத்திடாத பல்வேறு விவரங்களுடன் நிரம்பி வழிகிறது.

அந்த வகையில் ஆயிரக்கணக்கான விண்மீன் திரள்கள்,அகச்சிவப்புக் கதிர்களில் இதுவரை காணப்படாத பொருள்கள் ஆகியவை முதல் முறையாக விண்வெளி தொலைநோக்கியால் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளன.இதன்மூலம்,மக்கள் பிரபஞ்சத்தைப் பார்க்கும் விதத்தை எவ்வாறு மாற்றும் என்பதற்கான முதல் பார்வை கிடைத்து விட்டது.

குறிப்பாக,பூமியில் இருந்து 1300 கோடி ஆண்டுகள் தொலைவு பயணம் செய்து இப்புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக நாசாவின் நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Comment