நகர்புற உள்ளாட்சி தேர்தல்- மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இன்று ஆலோசனை..!

சென்னை மாநகராட்சி ஆணையர் இன்று மாலை காவல்துறை உயரதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. நகர்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரியில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கான அறிவிப்பை ஜனவரி மாதத்தில் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 150 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு பணிகள்  நிறைவடைந்துள்ளன. புதிதாக தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகள், மாநகராட்சிகளில் வார்டுகளின் எண்ணிக்கையை நிர்ணயித்து அவற்றின் எல்லைகளை வரையறை செய்வது தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி இன்று மாலை காவல்துறை உயரதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

author avatar
murugan