“18 முதல் 60 வயதுடைய ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற தடை” – உக்ரைன் அரசு அறிவிப்பு!

உக்ரைனில் உள்ள 18 முதல் 60 வயதுடைய அனைத்து ஆண் குடிமக்களும் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

உக்ரைனின் பல நகரங்கள் மீது குண்டு வீசியும்,தரைப்படை வழியாக நுழைந்தும்  ரஷ்யா பல்முனை தாக்குதல் நடத்தி வருகிறது.இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.அதே சமயம்,உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்தி,பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என ரஷ்யா அதிபர் விளாடிமிரிடம் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே,உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.அப்போது,ரஷ்யா பெரிய அளவில் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,பெரிய வல்லரசு படையை எதிர்த்து உக்ரைன் தனித்து போரிட்டு வருகிறது.காரணம்,நேட்டோ அமைப்பில் உக்ரைனை உறுப்பினர் ஆக்குவதாக கூறிய யாரும் உதவ முன்வரவில்லை.

இதனால்,ரஷ்யாவின் தாக்குதலில் ராணுவ வீரர்கள்,பொதுமக்கள் உட்பட 130 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதனால்,மக்கள் மற்றும் அரசின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, உக்ரைனின் ஆயுதப் படைகள் மற்றும் பிற இராணுவ அமைப்புகளின் போர் மற்றும் அணிதிரட்டல் தயார்நிலையை பராமரிக்க,ஒரு பரந்த அடிப்படையிலான ராணுவ அணிதிரட்டலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது”,என்று கூறினார்.

இதற்கிடையில்,ரஷ்யாவின் தாக்குதலுக்கு அஞ்சி உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு சென்று அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனில் உள்ள 18 முதல் 60 வயதுடைய அனைத்து ஆண் குடிமக்களும் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

உக்ரைனில் இராணுவச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தற்காலிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.அதன்படி,உக்ரைனில் 18-60 வயதுடைய ஆண்கள்,உக்ரைனின் எல்லைகளை விட்டு வெளியேறுவது தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும்,ரஷ்ய படையை எதிர்த்து உக்ரைன் ராணுவத்துக்கு துணையாக நிற்க 10 ஆயிரம் தானியங்கி இயந்திர துப்பாக்கிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.