பொன்னாடை, பூங்கொத்து வேண்டாம்.. நிதியுதவி வேண்டும்.! டிடிவி கோரிக்கை.!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) கட்சியின் தலைவருமான டிடிவி.தினகரன் தனது கட்சி நிர்வாகிகளுக்கு, தொண்டர்களுக்கு ஓர் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதில், தனது கட்சி வளர்ச்சிக்காக நிதி கொடுத்து உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து டி.டி.வி.தினகரன் வெளியிட்ட செய்தி குறிப்பில், நீங்கள் (ஆதரவாளர்கள்) என் மீது கொண்டுள்ள அன்பும், நான் உங்கள் மீது கொண்டுள்ள அன்பும் அவ்வளவு அற்புதமானது. எனக்கு எப்போதும் எல்லாமும் ஆகிய கழக உடன்பிறப்புகளுக்கு அன்புகலந்த கண்டிப்பான வேண்டுகோள் ஒன்றை முன்வைக்க விரும்புகிறேன்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!

நமது இயக்கம் துரோகத்தின் வலியிலிருந்து உருவானது. நமக்கென்று இருக்கும் லட்சியத்தை வென்றெடுக்கப்போவதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கழகத்தினர் அனைவரும் என்னுடன் தோளோடு தோள் நிற்கையில் தோல்விகள் தோற்று ஓடுவதோடு இனி வெற்றிகள் மட்டுமே நம்மை வந்து சேரும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ள சூழலில், தமிழகம் முழுவதும் உள்ள கழக நிர்வாகிகளை நான் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். இந்த நேரத்தில் நான் பங்கேற்கும் கழக நிகழ்ச்சிகள், நிர்வாகிகள் கூட்டங்கள் என அனைத்திலும், என் மீதான உங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக சால்வை, பொன்னாடை அணிவிப்பது, மலர்களை தூவி வரவேற்பது, பூங்கொத்துக்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவது என தொடர்ந்து நடைபெறும் சம்பிரதாய நிகழ்வுகள் நம் நிகழ்ச்சிகளுக்கும், நம்முடைய உரையாடல்களுக்கும் மிகுந்த இடையூறு ஏற்படுத்துவதாக உணர்கிறேன்.

இதனை பலமுறை நான் அன்போடு கூறியுள்ளேன். இதனை தற்போது அன்பு கலந்த கண்டிப்புடன் கூற விரும்புகிறேன். ஆதலால், பொன்னாடை, பூங்கொத்து, பரிசு பொருட்களுக்கு பதிலாக நிர்வாகிகள் தங்களால் இயன்ற நிதியுதவிகளை கொடுத்தால் அது நமது இயக்கத்தின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும் என அவர் டிடிவி.தினகரன் கேட்டுக்கொண்டதாக அமமுக நிர்வாகிகள் தகவல்களை இணையத்தின் வாயிலாக பதிவிட்டு வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.