“ரயில்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்” -ரயில்வே துறை அசத்தல் அறிவிப்பு!

டெல்லி:தனியார் மற்றும் மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

மத்திய அரசுக்கு மிகப்பெரிய வருவாயை அளிக்கும் இந்திய ரயில்வே துறையானது,தற்போது ஒரு முக்கிய திட்டத்தை அறிவித்துள்ளது.இதன் கீழ் தனியார் மற்றும் மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் மற்றும் அதற்கான உரிய வாடகைக் கட்டணங்களை அந்நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இந்த ரயில்களுக்கு ‘பாரத் கவுரவ் ரயில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆனால்,ரயில்களை எடுத்துச் செல்வதற்கு சில பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும்,அதற்கு பதிலாக ரயில்வே குறைந்தபட்ச கட்டணத்தை வசூலிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,ரயில்களை வாடகைக்கு எடுக்க ஆன்லைன் பதிவு கட்டணமாக ரூபாய் 1 லட்சம் என்றும் கூடுதல் வசதிகளை பயன்படுத்த 1 கோடி ரூபாய் வைப்பு தொகை செலுத்த வேண்டும் என்றும் மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின்கீழ்,தற்போது 180 பாரத் கவுரவ் ரயில்களை இயக்க மத்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.அந்த வகையில்,இதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணியை ரயில்வே துறை இன்று முதல் தொடங்கியுள்ளது,அவற்றிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

ரயில்வேயின் கூற்றுப்படி, பாரத் கௌரவ் ரயில்களை தனியார் துறை மற்றும் IRCTC இரண்டிலும் இயக்கலாம்.இது சுற்றுலா ஆபரேட்டரால் வசூலிக்கப்படும். இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை விளக்கும் கருப்பொருளின் அடிப்படையில் இந்த ரயில்கள் அமைக்கப்படும், பயணிகள்,சரக்கு போக்குவரத்துக்குப் பிறகு, சுற்றுலாவுக்காக ரயில்களின் மூன்றாவது பிரிவை மத்திய ரயில்வே தொடங்க உள்ளது.

திட்டத்தை அறிவித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பங்குதாரர்கள் இந்த ரயில்களை நவீனமயமாக்கி இயக்குவார்கள், அதே நேரத்தில் ரயில்வே துறை இந்த ரயில்களின் பராமரிப்பு, பார்க்கிங் மற்றும் பிற வசதிகளை வழங்கும் என்று கூறினார். இது வழக்கமான ரயில் சேவை போலவோ அல்லது பொதுவான ரயில் சேவையாகவோ இருக்காது என்றும் ‘பாரத் கௌரவ்’ ரயில்களின் முக்கிய குறிக்கோள் இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்துவதாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.