தேமுதிகவில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 25ம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெறலாம் – விஜயகாந்த்

தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 25ம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெறலாம் என்று அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் விருப்ப மனுக்களை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் வரும் 25ம் தேதி முதல் மார்ச் 5 வரை பெற்றுக்கொண்டு பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாகவும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற பொதுத் தொகுதிகளுக்கு ரூ.15,000, தனி தொகுதிகளுக்கு ரூ.10,000 மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தொகுதிகளுக்கு ரூ.10,000, தனி தொகுதிகளுக்கு ரூ.5,000 என விருப்ப மனு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பெறுவதற்கான தேதியை அதிமுக, திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து விட்டன. தற்போது, தேமுதிகவும் விருப்ப மனு தேதியை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்திருப்பதால், தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகே விருப்ப மனுக்களை பெற வேண்டிய நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்