US Election: வாக்கு எண்ணிக்கை தாமதம், அமெரிக்காவுக்கு இது முதல் முறையல்ல!

அமெரிக்க தேர்தலில் இன்று போல், அன்றும் நடைபெற்ற குழப்பங்கள்.

கடந்த நவ.3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில், தேர்தல்கள் முடிவுற்ற நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஜோ பைடன் முன்னிலையில் உள்ள நிலையில், அதிபர் ட்ரம்ப், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாக, நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அமெரிக்க விதியின் படி, முடிவுகள் அறிவிக்கப்பட்டு, எதிர்வேட்பாளர் வெற்றியை ஏற்றுக் கொண்டால் மட்டுமே வெற்றியை அறிவிக்க முடியும். அதன்படி, தோல்வியடைந்தவர் ஆட்சேபம் தெரிவிக்கும் பட்சத்தில், வழக்கு தொடரவும்  உரிமை உண்டு.

ஏற்கனவே 2000-ம் ஆண்டு இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் குடியரசு கட்சி சார்பில் ஜார்ஜ் டபிள்யு புஷ், மறுபுறம் அல்கோர். இருவரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், தேர்தல் நாளான நவ.7-ம் தேதி இரவில், முக்கிய மாநிலமான புளோரிடாவில் அல்கோர் வெற்றிபெற்றதாக, பல ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

புளோரிடாவில் வெற்றி பெற்றால், அதிபர் தேர்தலில் வெற்றி என்ற நிலையில், அல்கோரே வெற்றி பெற்றதாக மக்கள் முடிவுக்கு வந்தனர். ஆனால், சில மணி நேரங்களில் ஜார்ஜ் புஷ் முன்னிலையில் இருப்பதாக முடிவுகள் வெளியானது. வாக்கு வித்தியாசம் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில், செய்தியில் மாற்றம் ஏற்பட்டது.

அதன் பின் ஊடகங்கள் ஜார்ஜ் புஷ் தான் அதிபர் என மாற்றி கூறினர். அல்கோர் தோல்வியை ஒப்புக் கொண்டார். அதன் பின் தான் மீண்டும் ஒரு அதிரடி திருப்பம் தொடங்கியது. புளோரிடா மாநிலத்தில், ஜனநாயக கட்சி செல்வாக்கு மிகுந்த பகுதிகளில், முடிவுகள் வெளியான போது, இரு வேட்பாளர்களுக்கும் இடையேயான வித்தியாசம் படிப்படியாக குறைய தொடங்கியது.

ஒரு கட்டத்தில் அல்கோரை விட ஜார்ஜ் புஷ்-க்கு சுமார் 200 வாக்குகளே அதிகமாக கிடைத்துள்ளது. இதற்கு முன், தோல்வியை ஒப்புக் கொண்ட அல்கோர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். அதன் பின் மறு வாக்குஎண்ணிக்கை கோரி நீதிமன்றத்தை நாடினார்.

இரண்டு வாரத்திற்கு பின், 537 வாக்கு வித்தியாசத்தில் ஜார்ஜ் புஷ் வென்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதையும் அல்கோர் ஏற்காத நிலையில், புளோரிடா உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இதனை தொடர்ந்து, மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.

ஜார்ஜ் புஷ், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தை நாடினார். அமெரிக்க தேர்தல் நடைமுறைப்படி, டிசம்பர் மாதம் 2-ம் தேதிக்குள், ஒவ்வொரு மாநிலமும் தேர்தல் முடிவை அறிவித்ததாக வேண்டும்.

ஆனால், கடைசி சில மணி நேரங்கள் இருக்கும் நிலையில், உச்சநீதிமன்றம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தியது. வேறு எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில், தேர்தல் முடிந்து 36 நாட்களுக்கு பின், அல்கோர் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஜார்ஜ் புஷ் தேசிய அளவில், 271தேர்தல் சபை வாக்குகளையும், அல்கோர், 266 தேர்தல் சபை வாக்குகளையும் பெற்றிருந்தார்கள். தேவையை விட ஒரே ஒரு வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றிருந்த புஷ், அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று, 8 ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.