எந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை – ஓபிஎஸ்

இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திப் பேசும் கூட்டத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தி ஓபிஎஸ் அறிக்கை. 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வன் அவர்கள், இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திப் பேசும் கூட்டத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, இந்திய நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமயச் சுதந்திர உரிமை, அதாவது Right to Freedom of Religion அளிக்கப்பட்டு இருக்கிறது. சமயச் சுதந்திர உரிமை என்பது, தனி நபர்கள் அல்லது சமூகங்கள் எந்த ஒரு சமயம் தொடர்பாகவும், பொதுவிலோ, தனிப்பட்ட முறையிலோ, நம்பிக்கைகளை வைத்திருப்பதற்கும், வழிபடுவதற்கும், சடங்குகளை நடத்துவதற்குமான சுதந்திரம் ஆகும்.

அதே சமயத்தில் எந்த ஒரு மதத்தையும் இழிவுபடுத்துவதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை. ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுவதும், அதுகுறித்து அரசு வாய்மூடி மவுனியாக இருப்பதும் வேதனையளிக்கிறது.

முதலமைச்சர் என்பவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்கும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் பொதுவானவர் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். பேரறிஞர் அண்ணா அவர்களின் வழியில் செயல்படுகின்ற ஆட்சி என்று அடிக்கடி சொல்லும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தி.மு.க. கடவுளுக்கு எதிரான கட்சி அல்ல என்று அடிக்கடி சொல்லும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தி.மு.க.வில் இருப்பவர்களில் 90 விழுக்காடு பேர் இந்துக்கள் என்று கூறும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்துக் கடவுளை கொச்சைப்படுத்தி பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை அதிர்ச்சியோடும், வேதனையோடும் மக்கள் பார்க்கிறார்கள். பிற மதங்களையோ அல்லது பிற மதக் கடவுள்களையோ யார் பழித்துப் பேசினாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை.

இதுபோன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது என்பது சட்டம் ஒழுங்கை சீரழிக்கவும், மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கவும், மத மோதல்களை உருவாக்கவும் வழிவகுக்கும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு உண்டு.

எனவே, இந்துக் கடவுளை இழிவுபடுத்திய, இந்துக்களின் மனதை புண்படுத்திய, தரக் குறைவாகவும் நாகரிகமற்ற முறையிலும் இந்துத் தெய்வத்தை விமர்சித்துள்ள மேற்படி U2 Brutus என்ற யூ டியூப் சேனலை உடனடியாகத் தடை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், இதற்குக் காரணமானவர்கள்மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரவும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment