#Breaking:ராஜேந்திர பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு – உச்சநீதிமன்றம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் தொடர்பான வழக்கை ஜனவரி 10 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றசாட்டு வைக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர், பணமோசடி செய்த புகாரில் முன்ஜாமீன் கோரியை மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்ததால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்தார். 20 நாட்களாக 8 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்த நிலையில்,நேற்று மதியம் கர்நாடகாவில் ஹாசனின் ராஜேந்திர பாலாஜியை சுற்றி வளைத்து காவல்துறை கைது செய்தது.

கைது செய்யப்பட்டுள்ள ராஜேந்திர பாலாஜியை தமிழகம் அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், அவர் நள்ளிரவில் விருதுநகர் அழைத்து வரப்பட்டு, 3 மணி நேரத்திற்கும் மேலாக ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து,ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி பரம்பீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து,பலத்த பாதுகாப்புடன் அவரை மத்திய சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடு காவல்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தத நிலையில்,திடீர் திருப்பமாக மதுரை சிறைக்கு பதில் திருச்சி சிறைக்கு ராஜேந்திர பாலாஜி அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்,அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை,சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்த நிலையில்,உச்சநீதிமன்றத்தில் அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.அதன்படி,இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.அப்போது,முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் அரசின் உள்நோக்கம் உண்டா?,மேலும்,அவரின் முன்ஜாமீன் மனுவை இன்று விசாரிக்க இருந்தோம்,அதற்குள் ஏன் இவ்வளவு அவசரம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது.மேலும்,ராஜேந்திர பாலாஜியின் உறவினர்களை, வழக்கறிஞர்களை எல்லாம் ஏன் தொந்தரவு செய்தீர்கள்? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நிச்சயமாக இந்த விசயத்தில் தமிழக அரசுக்கு உள்நோக்கம் இல்லை. மாறாக,ராஜேந்திர பாலாஜிமீது ஏராளமான குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் வந்ததன் காரணமாகவே அவரை நாங்கள் கைது செய்ய வேண்டிய சூழல் ஏறபட்டது”,என்று தெரிவித்தார்.

இந்நிலையில்,முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு (ஜனவரி 10 ஆம் தேதிக்கு) உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.