ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு கோயில் அர்ச்சகர் மறுப்பு!

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் கோயிலில் அடக்குமுறை போன்ற சூழலை, தான் கண்டதாக ஆளுநர் ரவி கூறியிருந்த நிலையில், அதற்கு அக்கோயில் அர்ச்சகர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அதாவது, அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. சரியாக 12.20 மணிக்கு மேல், ராமர் கோயிலுக்குள் சிலை திறப்பதற்கான பிராண பிரதிஷ்டை பூஜை நடைபெற்றது. அதன்படி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கண்களில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் துணி அகற்றப்பட்டு பால ராமர் சிலைக்கு உயிரூட்டப்பட்டது.

இந்த சூழ்நிலையில், ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெற உள்ள சமயத்தில், தமிழக அரசு அடக்குமுறையை கையாண்டு வருவதாகவும் பாஜகவினர் குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தாலும், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கோயிலில் அடக்குமுறை இருப்பதாக தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன்.

இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது என தெரிவித்திருந்தார்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

இந்நிலையில், அடக்குமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை என கோதண்டராமர் கோயில் பட்டாச்சாரியார்கள் தெரிவித்தார்கள். இது தொடர்பாக கோதண்டராமர் கோயில் அர்ச்சகர் ஒருவர் தனியார் செய்தி ஊடக ஒன்றிக்கு பேட்டியளிக்கையில், “ஆளுநர் காலையில் வந்து சிறப்பாக தரிசனம் செய்துவிட்டு சென்றார். அவருக்கு கோயில் சார்பாக பூரண மரியாதை அளிக்கப்பட்டது.

எவ்வித பிரச்னைகளும் இன்றி அவர் தரிசனத்தை நிறைவு செய்ததாக அவர் கூறினார். மேலும் அவர் பேசுகையில், இன்று சிறப்பு பூஜை நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடு செய்ய இரவு நாங்கள் தூங்கவில்லை, அதனால் முகம் சோர்வாக காணப்பட்டிருக்கலாம்” என விளக்கமளித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.