சென்னையில் நேற்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்.! 33கோடி ரூபாய்க்கு மது விற்பனை.!

சென்னையில் நேற்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலமாக ரூ. 33 கோடியே 50லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 7ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதனையடுத்து ஐந்து மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை மீண்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் தொடங்கப்பட்டது.

சென்னையில் 720 டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டதில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்பட்ட 660 மதுபான கடைகளில் 20கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலங்களில் உள்ள மதுபான கடைகளில் 10 கோடியே 50 லட்சத்திற்கு மது விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மொத்தமாக ரூ. 33கோடியே 50லட்சம் வரை நேற்று திறக்கப்பட்ட 720 டாஸ்மாக் கடைகள் மூலமாக மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.