பிரதமர் மறக்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் அண்மையில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் இந்து கோவில்களை ஆளும் திமுக அரசு ஆக்கிரமித்துள்ளதாகவும், அதன் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருப்பது அநியாயம் என்றும் இதே போல சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்களை ஏன் கட்டுப்பாட்டில் கொண்டு வரவில்லை என்றும் பல்வேறு விமர்சனங்களை பிரதமர் மோடி தமிழக அரசின் மீது முன் வைத்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக நேற்று சென்னையில் நடைபெற்ற வள்ளலார் 200வது பிறந்தநாள் விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.

அவர் பேசுகையில், வள்ளலாரின் பிறந்தநாளை “தனிப்பெரும் கருணை நாள்”-ஆக தமிழக அரசு அறிவித்து அதனை கொண்டாடி வருகிறது. நாம் தமிழகத்தில் வள்ளலாரை உயர்த்தி பிடிப்பது சிலருக்கு பிடிக்கவில்லை. நாம் பெரியாரையும் போற்றுகிறோம். வள்ளலாரையும் போற்றுகிறோம். இதனை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. திராவிட மாடல் எனக்கூறி கோவில்களை பாதுகாக்கிறோம் இதுவும் சில பேருக்கு குழப்பமாக இருக்கிறது.

பிரதமர் மோடி தெலுங்கானா சென்றாலும், மத்திய பிரதேசம் சென்றாலும், அந்தமான் சென்றாலும் தமிழ்நாட்டைப் பற்றி தான் பேசுகிறார். தமிழகத்தை அவரால் மறக்க முடியவில்லை. இந்து கோயில்களை திமுக அரசு கைப்பற்றியுள்ளதாக கோவில் சொத்துகளை அபகரிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனை திட்டவட்டமாக மறுக்கிறேன். மேலும் பிரதமரின் குற்றச்சாட்டுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் உயர் பொறுப்பில் இருக்கும் பிரதமர் இப்படி தவறான அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறார். ஒரு மாநிலத்தை பற்றி இன்னொரு மாநிலத்தில் குறை சொல்கிறார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு ஆண்டுகளில் 3500 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்று உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த 112 திருக்கோவில்கள் சீர் செய்வதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் 5078 கோவில்களின் திருப்பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு இருக்கையில் பிரதமர் குற்றச்சாட்டு என்பது அவர் தவறாக புரிந்து கொண்டு உள்ளார் என்பதே பொருளாகும். எல்லாருக்கும் எல்லாம் என கருணை உள்ளத்தோடு ஆட்சி நடத்தி வருகிறோம். வள்ளலாரின் 200 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூரில் 17 ஏக்கரில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு வள்ளலார் பேருந்து நிலையம் என்று பெயர் வைக்க உள்ளோம் என்றும் அந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.