மகாராஷ்டிரா விவகாரம் : நாளை தீர்ப்பு – உச்சநீதிமன்றம் அறிவிப்பு

மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திடீரென்று நேற்று மகாராஷ்டிராவில்  முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் பதவியேற்றார்கள்.இவர்களுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் -சிவசேனா கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பாஜக ஆட்சி அமைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் -சிவசேனா  ஆகிய கட்சிகள் கூட்டணி வலுவாகத்தான் உள்ளது என்று தெரிவித்து வருகின்றது.இதனிடையே மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜக கூட்டணிக்கு ஆளுநர் அனுமதி அளித்த விவகாரம் தொடர்பாக  ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரி  தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் -சிவசேனா  ஆகிய கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்தது.இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.இதில் பாஜக தரப்பில் முகுல் ரோஹத்கி வாதிட்டார்.அவரது வாதத்தில் யாரை முதல்வராக நியமிக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. பெரும்பான்மையை அவையில்தான் நீருபிக்க வேண்டும்; ஆனால் ஆளுநரின் முடிவு சட்ட ஆய்வுக்கு உட்பட்டதல்ல என்று வாதிட்டார்.
தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் -சிவசேனா  ஆகிய கட்சிகள் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி மற்றும் கபில் சிபில் வாதிட்டனர்.இவர்களது வாதத்தில் ஆளுநர் மற்றும் பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உடனே உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தனர்.
இறுதியாக இந்த வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர் .இந்த விவகாரத்தில்  மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு, பட்னாவிஸ், அஜித்பவார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் அளித்த கடிதம், எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் ஆகியவற்றை நாளை காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்யுமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிற்கு என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.வழக்கில் நாளை உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.