தமிழகம் முழுவதும்…இன்று மேலும் சில தளர்வுகள்- அரசு முக்கிய அறிவிப்பு!

இன்றைய முழு ஊரடங்கில் திருமண விழாவிற்கு செல்பவர்களுக்கும், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு  உணவு விநியோகிக்கவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியதை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையில் இன்று முழு ஊரடங்கு அமல் என தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி,பால்,ATM  சேவை போன்ற அத்தியாவசிய பணிகள்,உணவகங்களில் பார்சல் சேவை மற்றும் விமானம்,இரயில்,பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்டவற்றிற்கு ஏற்கனவே அரசு அனுமதி வழங்கியுள்ளது.

உணவுப் பொருட்கள் விநியோகம்:

இந்நிலையில்,இன்று உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு  உணவு விநியோகிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று (9-1-2022) அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் போது, உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு தனியார் மின்னணு வர்த்தக விநியோக முறையில் மட்டுமின்றி, தங்களுடைய சொந்த விநியோக முறையில் (Own Delivery) மூலமாகவும் உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய அனுமதியளிக்கப்படும்.

இவ்வாறு வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு உணவகம் மூலமாக நேரடியாக உணவு வழங்கப்படுவதற்கு காவல் துறை ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சி:

மேலும்,தமிழகத்தில் ஊரடங்கு நாளான இன்று திருமணத்திற்கு செல்பவர்கள் அழைப்பிதழ் காண்பித்து பயணம் செய்யலாம் எனவும், திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.ஏற்கனவே உரிய ஆவணங்களுடன் இன்று அரசு தேர்வுகள் எழுத மற்றும் நேர்முக தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில்,தற்போது திருமண விழாவிற்கு செல்பவர்களுக்கும், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு  உணவு விநியோகிக்கவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.