Wednesday, November 29, 2023
Homeதமிழ்நாடுதமிழக பாஜகவினர் தொடர் கைது.? ஆளுநரிடம் புகார் அளிக்க உயர்மட்ட சிறப்பு குழு திட்டம்.!

தமிழக பாஜகவினர் தொடர் கைது.? ஆளுநரிடம் புகார் அளிக்க உயர்மட்ட சிறப்பு குழு திட்டம்.!

தமிழகத்தில் பாஜகவினர் காவல்துறையால் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவின் பெயரில் 4 மூத்த பாஜக தலைவர்கள் கொண்ட குழு நேற்று சென்னை வந்ததனர்.

இந்த சிறப்பு உயர்மட்ட குழுவில், கர்நாடகா முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, ஆந்திரா பாஜக தலைவர் புரந்தரேஸ்வரி, லோக்சபா எம்பிக்கள் சத்யபால் சிங், பிசி மோகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நேற்று பாஜக நிர்வாகிகளுடன் சென்னை தி-நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும், பாதிக்கப்பட்ட பாஜகவினர் வீடுகளுக்கு நேரில் செல்லவும் உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

தீவிரவாதிகள் நடமாடும் இடமாக தமிழ்நாடு இருக்கிறது.! எல்.முருகன் பரபரப்பு குற்றசாட்டு.!

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சதானந்த கவுடா, தமிழகத்தில் ஆளும் திமுக அரசால், தமிழக பாஜகவினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அறிக்கை தாக்கல் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அளிக்க உள்ளோம். அதே போல, இன்னும் 2,3 நாட்களில் விரிவான அறிக்கை தயார் செய்து அதனை பாஜக தேசிய தலைமைக்கும் அளிக்க உள்ளோம் என தெரிவித்தார்.

முன்னதாக தமிழகம் வந்துள்ள பாஜக சிறப்பு உயர்மட்ட குழு குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பல பாஜக நிர்வாகிகள் நள்ளிரவில் கைது செய்யப்படுகின்றனர். வார இறுதி நாட்களில் கைது செய்யப்படுகின்றனர். சமூக வலைதளங்களில் பிரபலமான பாஜகவினரை குறிவைத்து திமுக அரசு கைது செய்கிறது. திமுக அரசின் இந்த அத்துமீறலை உயர்மட்ட குழு வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என தெரிவித்தார்.