பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறை, உயர் கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள்!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று சட்டப்பேரவையில் தமிழக அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வைத்தார். அதில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக அரசின் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 44,042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2024-25 தமிழக பட்ஜெட்…முக்கிய சிறப்பம்சங்கள்…முக்கிய அறிவிப்புகள்.!

அதாவது கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ.3,743 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, உயர்கல்வித்துறைக்கு ரூ.8,212 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது உயர்கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ.1,245 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி சார்ந்த அறிவிப்புகள்:

  • மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரிப் படிப்புக்கான அனைத்து செலவையும் அரசே ஏற்கும்.
  • ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.2500 கோடி ஒதுக்கீடு.
  • அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்படும். அதாவது, அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
  • இல்லம் தேடி கல்வி திட்டம் 2ம் கட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.
  • உண்டு உறைவிட மாதிரி பள்ளிகளில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.
  • அரசு பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளின் கட்டட கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு.
  • அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் 6 முதல் 12 வரை பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
  • ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு இணைய வசதிகளை செயல்படுத்த ரூ.3,206 கோடி ஒதுக்கீடு.
  • பள்ளிக்கல்வி கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.
  • முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் இயங்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக அரசின் பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment