இத்தனை ஆண்டுகளாக கொடநாடு வராதது ஏன்? – மனம் திறந்த சசிகலா

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக சசிகலா, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கொடநாடு எஸ்டேட்டுக்கு நேற்று மாலை வந்தடைந்தார். கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா பெயரில் தியான மடம் மற்றும் சிலை அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக, சசிகலா அங்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது.

அதன்படி, கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவச்சிலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் சசிகலா, எஸ்டேட் மேலாளர் நடராஜ் மற்றும் சசிகலா குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர். கோடநாடு காட்சி முனைக்கு செல்லும் பிரதான சாலை அருகே 10 நம்பர் நுழைவு வாயில் பகுதியில் மறந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது.

பூமி பூஜைக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சசிகலா, அம்மா இல்லாமல் நான் கொடநாடு வந்தது இல்லை. அம்மா இல்லாமல் எப்படி கொடநாடு செல்வது என்ற தயக்கம் எனக்கு இருந்தது. இதனால் தான் இத்தனை ஆண்டுகளாக இங்கு வராமல் இருந்தேன். அம்மா ஜெயலலிதாவுக்கு ரொம்ப பிடித்த இடம் தான் கொடநாடு. வெளிநாடுகளை தாண்டி கொடநாட்டில் நல்ல இயற்கை சூழல் உள்ளது.

அதிமுகவிற்கும் ஓபிஎஸ்-க்கும் இனி எந்த காலத்திலும் தொடர்பில்லை.! நீதிமன்ற தீர்ப்புக்கு ஜெயக்குமார் வரவேற்பு.!

இதனால் தான் ஓய்வு எடுக்க கூட வெளிநாடு செல்லாமல் கொடநாடு வந்து செல்வார்கள். இங்கு அனைவரும் ஒரு குடும்பம்போல் இருப்போம். கொடநாட்டில் ஒரு சாதாரண பெண்ணாக, சகஜமாக ஜெயலலிதா வாழ்ந்துள்ளார். குடும்பத்தில் ஒரு பெண் எப்படி இருப்பார்களோ அதேபோல் கொடநாடு வந்தால் அம்மா இருப்பாங்க என கூறிய சசிகலா, கொடநாடு சுற்றுலா இடமாக இருப்பதால், சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்ல வேண்டும் என்பதற்காகவே, சாலையோரமாக சிலை அமைக்க இடத்தை தேர்வு செய்துள்ளதாகவும், பணிகளை விரைந்து முடித்து, வரும் ஆகஸ்ட் மாதத்தில் சிலை திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நேற்று கொடநாடு சென்ற சசிகலாவுக்கு தோட்ட நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலளர்களை பார்ப்பதற்கும், ஜெயலலிதாவிற்கு பூஜை செய்ய வேண்டும் என்பதற்காகவும் வந்துள்ளேன். ஆனால், இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.

கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு, நிச்சயமாக ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையைப் பெற்று கொடுப்பார். விரைவில் ஜெயலலிதாவின் உருவச்சிலை அமைக்கப்பட்டு, திறக்கப்படும். அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறேன். இது விரைவில் வெற்றியடையும், அதற்காக தான் இங்கு வந்துளேன் என கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்