மகளிருக்கு மாதம் ரூ.1000;எகிறும் எதிர்பார்ப்பு – தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்!

சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 18-ஆம் தேதி(இன்று) 2022-23-ஆம் நிதியாண்டுக்கான  பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றும் இதுபோன்று வேளாண் பட்ஜெட் மார்ச் 19-ஆம் தேதி (நாளை) தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

2-வது பட்ஜெட்:

சபாநாயகர் தலைமையில் அன்று அலுவல் ஆய்வுக்குழு கூடி பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.  தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பிறகு தாக்கல் செய்யப்படும் 2-வது பட்ஜெட் இதுவாகும். முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதன்முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி 2021-22ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த பட்ஜெட்டில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய அறிவிப்பை நிதியமைச்சர் தியாகராஜன் அறிவித்தார்.

2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்:

இந்நிலையில்,2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை  இன்று காலை 10 மணிக்கு  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் தாக்கல் செய்கிறார்.  இந்த பட்ஜெட்டில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில்,பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது குறித்த அறிவிப்பு இன்றைய பட்ஜெட்டில் இடம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்து உள்ளது. மேலும், இந்த பட்ஜெட்டில், திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை அறிவிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.