அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருங்கள் – ரஜினி மக்கள் மன்றம் உத்தரவு

தேர்தல் சின்னம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும் என்று  ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனையும் நியமனம் செய்வதாக ரஜினி அறிவித்தார்.

இதனிடையே நடிகர் ரஜினி ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியை பதிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் ரஜினி கேட்ட பாபா முத்திரை சின்னத்திற்கு, தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்த நிலையில், அதற்கு பதிலாக மக்கள் சேவை கட்சிக்கு, ‘ஆட்டோ’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில்,இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, அதில் இடம்பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தலைமையிடமிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை, நம் ரஜினி மக்கள் மன்ற காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.