தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக கேள்வி நேரம் நேரலை..! அன்புமணி ராமதாஸ் வரவேற்பு..!

பேரவையை ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் நடத்துவதற்கும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.

நடப்பு ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கி நடைபெற்றது.இதனையடுத்து,ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இன்று மற்றும் நாளை விவாதம் நடக்கிறது என்றும்,ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் 7-ஆம் தேதி பதிலுரை அளிக்கிறார்.

இந்நிலையில்,தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக கேள்வி நேரம் இன்று நேரலை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக கேள்வி நேர நிகழ்வுகள் நேரடியாக வலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படுகின்றன. அவை நடவடிக்கைகளை எந்த தணிக்கையும் இல்லாமல் மக்கள் நேரடியாக அறிந்து கொள்வது மக்களின் ஜனநாயக உரிமை என்ற வகையில் இதை பா.ம.க. வரவேற்கிறது!

சட்டப்பேரவை ஆண்டுக்கு 4 முறை மொத்தம் குறைந்தது 100 நாட்கள் நடைபெற வேண்டும்; அவை நடவடிக்கைகள் முழுமையாக நேரடியாக ஒளிபரப்பட வேண்டும் என்று முதன்முதலில் வாக்குறுதி அளித்ததும், வலியுறுத்தியதும் பா.ம.க. தான். அந்த வகையில் கேள்வி நேர நேரலை மகிழ்ச்சியளிக்கிறது!

பேரவை நடவடிக்கைகளை முழுமையாக நேரலை செய்யவும், அதற்காக தனித் தொலைக்காட்சி தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா அச்சம் விலகிய பிறகு பேரவையை ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் நடத்துவதற்கும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.