காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து… பிரதமர் மோடி உறுதி!

PM Modi: ஜம்மு காஷ்மீர் விரைவில் மாநில அந்தஸ்தை மீண்டும் பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பிரதமர் கூறியதாவது, ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கான காலமும் வெகு தொலைவில் இல்லை.

பல ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு என எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் சூழல் முற்றிலுமாக மாறிவிட்ட விலையில், வளர்ச்சி அடைவதோடு நம்பிக்கையும் அதிகரித்துவிட்டது. எனவே, இங்குள்ள மக்கள் தங்கள் கனவுகளை எம்எல்ஏக்கள், அமைச்சர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நிலை வரும் என தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்