#PBKSvRR: சுழலில் கலக்கிய சாஹல்! ராஜஸ்தானுக்கு 190 ரன்கள் வெற்றி இலக்கு.!

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 190 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் கிங்ஸ்.

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்க வீரர்களான ஜானி பேர்ஸ்டோவ், ஷிகர் தவான் களமிறங்கினர். இதில் தவான் 12 ரன்களில் விக்கெட்டை இழந்தார். சிறப்பாக விளையாடி வந்த பேர்ஸ்டோவ் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து, 40 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதன்பின் வந்த பானுகா ராஜபக்ச 27 ரன்களும், கேப்டன் மயங்க் அகர்வால் 15 ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இவர்களைத்தொடர்ந்து, ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன் ஜோடி சற்று அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், பிரசித் கிருஷ்ணா பந்தில் லிவிங்ஸ்டன் போல்ட் ஆனார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. ஜிதேஷ் சர்மா 18 பந்துகளில் 38 ரன்கள் அடித்து இறுதிவரை களத்தில் இருந்தார். அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 56 ரன்கள் எடுத்திருந்தார்.

ராஜஸ்தான் பந்துவீச்சை பொறுத்தளவில் சிறப்பாக பந்துவீசிய யுஸ்வேந்திர சாஹல் 3, பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறும் என எதிர்பார்க்கபடுகிறது. பஞ்சாப் வெற்றி பெற்றால் 6வது இடத்துக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்